ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்

by Staff Writer 28-07-2021 | 8:38 PM
Colombo (News 1st) சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆசிரியர்களும் அதிபர்களும் இன்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். குளியாபிட்டிய நகரில் இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹெட்டிபொல, குருணாகல், மாதம்பை வீதிகளுடாக பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் குளியாப்பிட்டி நகரை அடைந்தனர். மஹியங்கனை, ஹோமாகம, காலி மற்றும் எஹலியகொடயிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாஹோ கல்வி வலய பெற்றோர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, தமது பிள்ளைகள் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்திலும் இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.