பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடில்லை; ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

by Staff Writer 27-07-2021 | 3:39 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க , உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்படாமையால், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாட்டை நிவர்த்திக்குமாறு கோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர்.