உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு

by Staff Writer 24-07-2021 | 2:29 PM
Colombo (News 1st) யாழ் - அரியாலையில் இன்று (24) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை அரியாலையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் டயருக்கு பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் தலைமறைவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அரியாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.