மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

by Bella Dalima 23-07-2021 | 6:43 PM
Colombo (News 1st) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். ராய்காட் (Raigad) மாவட்டத்தின் Taliye கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன. இதனால் மேலும் பலர் மண்ணில் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது. இந்த அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினரும், தீயணைப்பு படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 36 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாதளவிற்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து, ஆறுகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஏராளமான கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனைத் தவிர ரட்னகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது. தொலைபேசி கோபுரங்கள் செயலிழந்துள்ளதால், மக்களைத் தொடர்புகொள்ள முடியாத இக்கட்டான நிலை தோன்றியுள்ளது. இதனிடையே, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைக்குள் வௌ்ளநீர் புகுந்ததனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பலத்த மழை பெய்யுமெனவும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.