ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது

பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது

by Staff Writer 23-07-2021 | 2:21 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த வாக்குமூலங்களூடாக பல விடயங்கள் அம்பலமாகியுள்ளன. அதற்கமைய, அண்மையில் உயிரிழந்த சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர், ஏற்கனவே இரண்டு யுவதிகள் அங்கு தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தரகரே அந்த இரண்டு யுவதிகளையும் கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். 32 வயதான பெண்ணொருவரும் 22 வயதான யுவதியும் ஏற்கனவே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். டயகம பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதி 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தொழில் புரிந்துள்ளார். இந்த காலப்பகுதியில் தாம் இரு தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். யுவதியின் வாக்குமூலத்திற்கு அமைய, முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். மதவாச்சி பகுதியை சேர்ந்த 44 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய, குறித்த வீட்டிற்கு சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.