பதிவு செய்யப்படாத மருந்துப்பொருட்கள் விற்பனை

பதிவு செய்யப்படாத மருந்துப்பொருட்கள் விற்பனை: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 23-07-2021 | 2:59 PM
Colombo (News 1st) நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துப்பொருட்கள் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுமார் 7 வகையான மருந்துப்பொருட்கள் பதிவு செய்யப்படாது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உணவு மற்றும் ஔடதங்கள் தொடர்பான தலைமை பரிசோதகர் அமித் பெரேரா குறிப்பிட்டார். அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள மருந்தகங்களில் குறித்த மருந்துப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது தொடர்பில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையில் பதிவு செய்யாது விற்பனை செய்யப்படும் மருந்துப்பொருட்களில், கொரோனா நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளும், விட்டமின்களும் விற்பனை செய்யப்படுவதாக அமித் பெரேரா சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு ஔடதங்களை இறக்குமதி செய்யும் ஒருவருக்கு சொந்தமான தெஹிவளை பகுதியிலுள்ள களஞ்சியசாலையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையில் பதிவு செய்யப்படாத, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மருந்துப்பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உணவு மற்றும் ஔடதங்கள் தொடர்பான தலைமை பரிசோதகர் அமித் பெரேரா குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்