யானை - மனித மோதல்கள் தொடர்பில் COPA பரிந்துரை

யானை - மனித மோதல்கள் தொடர்பில் புதிய கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு COPA பரிந்துரை

by Staff Writer 22-07-2021 | 5:46 PM
Colombo (News 1st) யானை - மனித மோதல்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கை விரைவில் மாற்றப்பட வேண்டும் எனவும் COPA குழு பரிந்துரைத்துள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் அண்மையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. யானை - மனித மோதல்களால் உலகத்திலேயே அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் யானை - மனித மோதல்கள் காரணமாக வருடாந்தம் ஏறத்தாழ 272 யானைகள் உயிரிழக்கின்றன. அத்துடன், 2019 ஆம் ஆண்டில் 407 யானைகளும் 122 மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை வெற்றியளிக்காத பழைய கொள்கைகளைக் கைவிட்டு புதிய கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறுஅரசாங்க கணக்குகள் பற்றிய குழு, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பரிந்துரைத்துள்ளது. மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் யானைகளைக் கட்டுப்படுத்தும் கொள்கை வெற்றியளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.