இறக்குமதியை நிறுத்திய LAUGFS: சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

by Staff Writer 21-07-2021 | 8:15 PM
Colombo (News 1st) நாட்டின் சமையல் எரிவாயு சந்தையில் 30 வீத பங்களிப்பை வழங்கிய LAUGFS Gas நிறுவனம் இறக்குமதியை நிறுத்தியதன் காரணமாக சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு லிட்ரோ மற்றும் LAUGFS Gas நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக அனுமதி கோரின. எனினும், விலை அதிகரிக்கப்படாத பின்புலத்தில் LAUGFS Gas நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுத்தது. LAUGFS Gas நிறுவனம் இறக்குமதியை நிறுத்தத் தீர்மானித்துள்ள போதிலும் அதனை ஈடு செய்யும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். இதனிடையே, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்தியில் கொள்வனவு, விநியோகம், களஞ்சியப்படுத்தல் என்பவற்றை இரண்டு நிறுவனங்கள் முன்னெடுப்பது என அமைச்சரவை குழு இன்று தீர்மானித்தது. சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விநியோக செயற்பாட்டை, இரண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கிய விசேட குழுவிற்கு வழங்க அமைச்சரவைக்குழு தீர்மானித்தது. எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை நிதி அமைச்சு தயாரிக்கும் என வர்த்தக அமைச்சர் நேற்று கூறினார். எவ்வாறாயினும், சந்தையில் தற்போது LAUGFS சமையல் எரிவாயுவிற்கு நிலவும் தட்டுப்பாடு பயனாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.