by Staff Writer 19-07-2021 | 2:45 PM
Colombo (News 1st) பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் இரண்டு தகர்க்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறுக்கமான விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போதே இவை தகர்க்கப்பட்டுள்ளன.
பிரான்ஸின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையமொன்று கடந்த வௌ்ளிக்கிழமை இரவு தகர்க்கப்பட்டதுடன், தீயணைப்பதற்கு நீர் பீச்சியடிக்கப் பயன்படுத்தப்படும் குழாய்களைக் கொண்டு வௌ்ளமாக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியிலுள்ள மற்றுமொரு நிலையம் அதற்கடுத்த நாள் பகுதியளவில் தகர்க்கப்பட்டுள்ளது.
கொவிட் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கொவிட் கட்டுப்பாட்டுத் திட்டங்களில், சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி ஏற்றும் திட்டமும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.