தமிழக கடலில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக்கப்பல்

தமிழக கடலில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

by Staff Writer 19-07-2021 | 10:30 PM
Colombo (News 1st) இலங்கையிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் தூத்துக்குடியிலுள்ள துறைமுகமொன்றில் இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு சீனாவிடமிருந்து விடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் தமிழகத்திற்கு அழைக்கப்பட்டதா என இந்திய ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. இந்திய கடற்படைக்கு சொந்தமான INS "சிந்துஷாஸ்ட்ரா" என்ற இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கடலிலிருந்து வானை நோக்கியும் மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலை இலக்காக கொண்டும் தாக்குதல் நடத்தும் வல்லமை உள்ளிட்ட மேலும் பல இராணுவ தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் ஒரு வாரமாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் தென்னிந்திய கடற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியபோது இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் குறித்து தம்மால் கருத்து வௌியிட முடியாது என அறிவிக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் அல்லது வேறு தேசிய வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலான தீர்மானங்கள் உரிய அதிகாரிகளின் நடவடிக்கை, தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்தியா மற்றும் அதன் அபிலாஷைகளை பாதுகாக்கும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்தது. பிராந்தியத்தில் பிரித்தானிய கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள போர் பயிற்சிகளில் இணைவதற்காகவே இந்த நீர்மூழ்கிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சீனா, இலங்கையில் கடற்சார் வல்லமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்ற பின்புலத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.