by Staff Writer 16-07-2021 | 4:26 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலினை பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையூடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ரவீனா டி சில்வா இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், மிரிஹான, இராஜகிரிய மற்றும் தலங்கம பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பத்தரமுல்ல சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் ஊடகப் பிரிவினால் கடந்த 6 ஆம் திகதி வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை தவிர, ஜோசப் ஸ்டாலினுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோசப் ஸ்டாலின் முல்லைத்தீவு பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.