நான்காவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு

நான்காவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 15-07-2021 | 7:45 AM
Colombo (News 1st) Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்படும் தெழிற்சங்க நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (15)  தொடர்கின்றது. கடந்த 12 ஆம் திகதி தொழிநற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தமது உறுப்பினர்களுக்கு நீதி மன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட நிலையிலும் சிலர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 24 ஆண்டுகளாக காணப்படும் அதிபர், ஆசியர்களுக்காக சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். எனினும் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார் மேலும் காலம் தாழ்த்தாது, தமது பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் வலியுறுத்தியுள்ளார். 45 இலட்சம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளமை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லை என கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் கூறியுள்ளார். இதனால் இந்த தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை, தமது தொழிற்சங்கத்தினர் இசுருபாயவுக்கு செல்லவுள்ளதாகவும் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக Online முறையிலான கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதுடன் மாணவர்கள் கல்வி கற்பதற்காக இருந்த ஒரேயொரு சந்தர்ப்பமும் அற்றுப்போய் இன்றுடன் 4 நாட்கள் ஆகின்றன. இதனால் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பான தரம் 05 புலமைபரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.