இறக்குமதி தீர்வைகளை தற்காலிகமாக நீக்கியது கியூபா

அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி தீர்வைகளை தற்காலிகமாக நீக்கியது கியூபா

by Bella Dalima 15-07-2021 | 4:27 PM
Colombo (News 1st) உணவு, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி தீர்வைகளை கியூபா தற்காலிகமாக நீக்கியுள்ளது. கியூபாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த திங்கட்கிழமையிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் குறித்த வகையான பொருட்களைக் கொண்டு வருவதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதி வரை இந்த இறக்குமதி தீர்வை நீக்கம் அமுலிலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உணவுகள், மருந்துகளுக்கான தட்டுப்பாடு, விலைவாசி அதிகரிப்பு, COVID-19-ஐ கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். கியூபாவிற்கு வருகை தருபவர்கள் சுங்கத் தீர்வைகள் எவையுமின்றி பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்க வேண்டுமென்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது. கியூபாவில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.