நேபாளத்தின் புதிய பிரதமரானார் ஷேர் பகதூர் தியூபா

ஷேர் பகதூர் தியூபா நான்காவது தடவையாகவும் நேபாளத்தின் பிரதமரானார் 

by Staff Writer 14-07-2021 | 10:05 AM
Colombo (News 1st) நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா (Sher Bahadur Deuba), பதவியேற்றுள்ளார். 75 வயதான தியூபா, ஏற்கனவே 3 தடவைகள் நேபாள பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் 2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, கே.பி.ஷர்மா ஒலி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் இரு தலைவர்களுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றம் பிரதமரினால் கலைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நேபாள உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்தை 7 நாட்களுக்குள் கூட்டவும் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவை பிரதமராக நியமிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்றிரவு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி (Bidya Devi Bhandari), ஷேர் பகதூர் தியூபாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். எனினும் தியூபாவின் நியமனத்தை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலி, விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.