வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க யோசனை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிக்க யோசனை

by Staff Writer 14-07-2021 | 10:21 AM
Colombo (News 1st) தேர்தலில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தேர்தலில் களமிறங்கும் சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரம் கட்டுப்பணம் செலுத்த வேண்டுமென்ற நடைமுறையை அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் வேட்பாளர்களும் செலுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சுயாதீன உறுப்பினர் ஒருவர் 75,000 ரூபா கட்டுப்பணம் செலுத்தும் நடைமுறையே தற்போது அமுலிலுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாபதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரால் 50,000 ரூபா கட்டுப்பணமாக செலுத்தப்படுகின்றது. இந்நிலையில், குறித்த கட்டுப்பணத் தொகையை 3 மில்லியன் ரூபா வரை அதிகரிக்குமாறு அமைச்சரவைப் பத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்களில் அத்தியவசியமின்றி வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுக்கும் வகையிலும் பொதுமக்களின் பெருமளவு பணம் வீணாக செலவிடப்படுவதை தடுக்கும் வகையிலும் கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.