கைதான 10 பேரின் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைதான 10 பேரின் விண்ணப்பங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 13-07-2021 | 4:05 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் கைது செய்யப்பட்ட 10 பேர் தொடர்பான விண்ணப்பங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தலைமையிலான குழுவினர் விண்ணப்பங்களை முன்வைத்துள்ளனர். வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் M.H.M.பசீல் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், சந்தேகநபர்கள் சார்பில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பொலிஸார் கால அவகாசம் கோரியுள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி பொலிஸாரின் ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன. இதனிடையே, இன்றும் சந்தேகநபர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் வரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை, கல்குடா, கிரான் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.