கொத்தலாவல சட்டமூலத்தால் இலவசக் கல்விக்கு பேரழிவு

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவசக் கல்விக்கு பேரழிவை ஏற்படுத்தும்: சஜித் பிரேமதாச ​

by Staff Writer 13-07-2021 | 8:20 PM
Colombo (News 1st) உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலங்கையின் இலவசக் கல்விக்கு பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது தேசிய ரீதியிலான தேவையாக இருந்தாலும், அந்த அடிப்படை தேவைக்கு அப்பாற்சென்று இலவசக் கல்வியை அழிப்பதற்கு உயர் கல்வி கட்டமைப்பிற்கு அப்பால் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் இந்த செயற்பாடு மூலம் உயர் கல்வியின் பண்புகள், தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செல்வாக்கு முற்றாக இரத்தாகும் எனவும் அது இலவசக் கல்வியை பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.