கட்சியிலிருந்து நீக்குவதை தடுத்து தடை உத்தரவு

ஜா-எல நகர சபையின் ஐதேக உறுப்பினர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்குவதை தடுக்கும் தடை உத்தரவு

by Staff Writer 12-07-2021 | 10:11 PM
Colombo (News 1st) ஜா-எல நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரை அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் அதன் ஒழுக்காற்று குழுவிற்கு இன்று (12) தடை உத்தரவு பிறப்பித்தது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அளுத்கே இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜா-எல நகர சபையின் உறுப்பினர்களான அர்னஸ்ட் பெர்னாண்டோ மற்றும் ஆர்.ஆபேரத்ன ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தாம் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றஞ்சுமத்தி கட்சியில் இருந்து வௌியேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நடவடிக்கை எடுத்தமை அநீதியானது என குறித்த இருவரும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.