​ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை: பின்னணியில் வௌிநாட்டு சதி

​ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலையின் பின்னணியில் வௌிநாட்டு சதி

by Bella Dalima 10-07-2021 | 4:02 PM
Colombo (News 1st) ​ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கரீபியன் தீவு நாடான ஹெய்ட்டியின் ஜனாதிபதி ஜோவனெல் மோயிஸ் (வயது 53) கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மார்டின் மோயிஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ​ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. ஜோவனெல் மோயிஸை படுகொலை செய்த கூலிப்படையினர் தலைநகர் Port-au-Prince-இல் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து, அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதன்போது கூலிப்படையினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறுதியாக கூலிப்படையினர் 17 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர், ஹெய்ட்டி-அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், ஜனாதிபதியின் படுகொலையில் கொலம்பியாவை சேர்ந்த 26 பேர், 2 ஹைதி-அமெரிக்கர்கள் என மொத்தம் 28 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்களில் 8 பேர் தற்போது தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். ​ஹெய்ட்டி ஜனாதிபதி கொலையில் தொடர்புடைய கொலம்பியாவை சேர்ந்த 26 பேரில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.