உலகில் நிமிடத்திற்கு 11 பேர் பட்டினியால் மரணம் 

உலகில் நிமிடத்திற்கு 11 பேர் பட்டினியால் மரணிப்பதாக ஆய்வில் தகவல்

by Bella Dalima 09-07-2021 | 4:33 PM
Colombo (News 1st) உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் மரணிப்பதாக Oxfam நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் Oxfam நடத்திய ஆய்வில், கடந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 2 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகளவில் பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலியாகி வருவது தெரியவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஆய்வு முடிவானது, உலகின் 10 பணக்காரர்களின் செல்வம் கடந்த ஆண்டு மட்டும் 41,300 கோடி அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தொற்றுநோய் பரவல், காலநிலை மாற்றம் ஆகிய காரணிகளால் உணவின்மை சிக்கல் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ள Oxfam, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப்பொருட்களின் விலை 40% அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஏழை மக்களுக்கு உணவு கிடைப்பது சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.