ஹெய்ட்டி ஜனாதிபதியை கொன்ற நால்வர் சுட்டுக் கொலை

ஹெய்ட்டியில் பதற்றம்: ஜனாதிபதியை கொன்ற நால்வர் சுட்டுக் கொலை, இருவர் கைது

by Bella Dalima 08-07-2021 | 3:46 PM
Colombo (News 1st) ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினர் சுற்றிவளைத்து, 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர். நேற்று (07) ஹெய்ட்டி அதிபர் ஜோவனெல் மொய்ஸ் (53) அடையாளம் தெரியோதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்போது, அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதிபர் கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஜோவனெல் மொய்ஸின் பதவிக் காலம் முடிவடைந்திருந்த நிலையில், மேலும் ஒரு வருடத்திற்கு பதவியை நீடிப்பதாக அவர் அறிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த ஆயுத கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அதிபர் கொலை செய்யப்பட்டதால் ஹெய்ட்டியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளதுடன், 2 பேரை கைது செய்துள்ளனர்.