by Staff Writer 08-07-2021 | 4:25 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான பரிசீலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் நீண்ட விளக்கமளித்து மனுக்கள் தொடர்பிலான சமர்ப்பணங்களை இன்று நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் அந்த சட்டத்தின் 11/1 ஆம் பிரிவின் கீழான நிவாரணத்தை வழங்குமாறு கோரும் விண்ணப்பத்தை ஏற்கனவே சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
அந்த விண்ணம் பரிசீலனையில் இருப்பதனால், எதிர்வாதத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்வைப்பதாக இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.