நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள்

நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள்

by Staff Writer 08-07-2021 | 8:34 PM
Colombo (News 1st) பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக்காலம் தொடரும் நிலையில், முதன்முறையாக அமைச்சரவையில் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 43 அமைச்சர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும் இரகசியக் காப்பு பிரமாணமும் நேற்று செய்து வைத்தார். தமிழகத்தின் பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் எல்.முருகன், காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பெண்கள், பொறியியலாளர்கள் மற்றும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரப்பிரதேசத்திற்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 7 பேருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.