ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக்கொலை

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக்கொலை

by Bella Dalima 07-07-2021 | 4:49 PM
Colombo (News 1st) ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் (Jovenel Moise) அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக இடைக்கால பிரதமர் Claude Joseph இன்று (07) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் அடையாளம் தெரியாத குழுவினர் ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஜனாதிபதியின் மனைவி துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய குழவில் சிலர் ஸ்பானிய மொழியில் பேசியதாக தகவல் வௌியாகியுள்ளது. தற்போது நாட்டிற்கு பொறுப்பாகவுள்ள Claude Joseph ஜனாதிபதி மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். 53 வயதான Jovenel Moïse, 2016 நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுடன் 2017 பெப்ரவரி முதல் ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்தார். அவர் சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்தன. அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், பல அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் ரீதியில் பிளவடைந்துள்ள ஹெய்ட்டியில்  வறுமை மற்றும் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை காரணமாக வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹெய்ட்டியில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து வருவதுடன், உணவுத் தட்டுப்பாடும் காணப்படுகின்றது.