அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

by Staff Writer 07-07-2021 | 5:01 PM
Colombo (News 1st) ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார். நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை விரைவாக ஏற்றுவதற்கு ஜனாதிபதியின் பூரன ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார். அதற்கமைய, நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து இன்று முற்பகல் ZOOM தொழில்நுட்பத்தினூடாக தௌிவூட்டல் முன்னெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் கூறினார். மாகாண ஆளுநர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் கல்விசாரா ஊழியர்களும் வருகை தருவதற்குரிய திகதியும் நேரமும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.