by Staff Writer 07-07-2021 | 6:29 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, துமிந்த நாகமுவவுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் அடங்கலாக 6 பேர் பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
சந்தேகநபர்களை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், சந்தேகநபர்களை பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி, அவரின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய, 6 பேரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொழும்பு இராமநாயக்க மாவத்த பகுதியில் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 06 பேர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.