மட்டக்களப்பு கொலை வழக்கு ஒத்திவைப்பு

வியாழேந்திரன் வீட்டின் முன்பாக இடம்பெற்ற கொலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 06-07-2021 | 8:40 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் உரிய முறையில் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படாமையால் வழக்கு விசாரணையை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் அவரை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவில்லை. எனினும், மனுதாரர்கள் சார்பில் உயிரிழந்தவரின் பெற்றோர் மன்றில் இன்று ஆஜராகினர். கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான CCTV காணொளிக்கான சில தரவுகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பினர் அறிவித்துள்ளனர். அத்துடன், இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புவதற்காக மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலும் குறைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் காணப்படும் குறைபாடுகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை 09 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.