இந்தோனேஷியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாடு

இந்தோனேஷியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாடு

by Chandrasekaram Chandravadani 05-07-2021 | 2:50 PM
Colombo (News 1st) இந்தோனேஷியாவின் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு இந்தோனேஷிய அரசாங்கம், உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒக்சிஜனுக்காக தட்டுப்பாட்டினால் 63 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் நாளாந்தம் 25,000 இற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. வேகமாக பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென்கிழக்காசியாவில் கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேஷியா பதிவாகியுள்ளது. இதுவரை 2.3 மில்லியன் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 60,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஒப்பீட்டளவில் தலைநகர் ஜகார்த்தா தவிர்ந்த நாட்டின் ஏனைய பாகங்களில் கொரோனா பரிசோதனை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், தரவுகளைக் காட்டிலும் அதிகளவானவர்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் முக்கிய தீவான ஜாவா மற்றும் சுற்றுலாத் தீவான பாலி என்பன கடந்த வாரத்தில் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.