15 வயது சிறுமி விற்பனை; மேலுமொருவர் கைது

பாலியல் தொழிலுக்காக 15 வயது சிறுமி விற்பனை; மேலுமொருவர் கைது

by Staff Writer 03-07-2021 | 2:52 PM
Colombo (News 1st) கல்கிசையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளமூடாக விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் 15 பேர் சிறுமியை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (01) கைது செய்யப்பட்ட நால்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரும் கப்பல் கெப்டன் ஒருவரும் குறித்த கப்பல் கெப்டனின் உதவியாளரும் அடங்குகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்து கடந்த ஜூன் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். சிறுமியின் கையடக்க தொலைபேசியிலுள்ள WhatsApp, Viber உள்ளிட்ட கணக்குகளை ஆராய்ந்ததில், மேலும் பலர் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்