by Bella Dalima 03-07-2021 | 8:58 PM
Colombo (News 1st) ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இருவர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
ஜப்பானின் Atami நகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மலையிலிருந்து கறுப்பு நிறத்தில் சேற்று மணல் சரிந்து, பல குடியிருப்புகளை அடித்துச்செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
மண்ணுக்குள் புதைந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 20 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், உயர் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவில் காணாமற்போனவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினரும் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.