அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள்

by Staff Writer 03-07-2021 | 2:39 PM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (03) அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். பதவி உயர்வு, விபத்துக் கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட 10 காரணிகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார். சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பொதுவான சிக்கல்களை முன்வைத்தும் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சில தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் மாத்திரம் தீர்க்கப்படுவதால், தொழிற்சங்கங்களிடையே பிரச்சினைகள் எழுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார். கொரோனா ஒழிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இன்று விலகியிருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் தொழிற்சங்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளும் இன்று அனைத்து சேவைகளிலிருந்தும் விலகியுள்ளனர். பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்ற போதிலும், வைத்தியசாலைகளின் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.