கல்கிசையில் சிறுமி விற்பனை; மேலும் சிலர் கைது

பாலியல் செயற்பாடுகளுக்காக 15 வயது சிறுமி விற்பனை: மேலும் சிலர் கைது

by Staff Writer 01-07-2021 | 11:06 AM
Colombo (News 1st) கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்தமை, கொள்வனவு செய்தமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் மேலும் மூவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைதானவர்களில் மிஹிந்தலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் பிரபல வர்த்தகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (01) கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். குறித்த சிறுமியை கொள்வனவு செய்த மேலும் சிலர் தொடர்பான தகவல்கள் வௌியாகி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இதனிடையே, சிறுமியை விற்பனை செய்வதற்கு உதவிய மற்றுமொரு நபர், வேறொரு பெண்ணை விற்பனை செய்வதற்காக அழைத்து சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மற்றும் சந்தேகநபர் ஆகியோர் வௌ்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கமைய, சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்தமை, கொள்வனவு செய்தமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.