அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் அபராதம்

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும்: விவசாய அமைச்சர்

by Staff Writer 30-06-2021 | 3:51 PM
Colombo (News 1st) சந்தையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் ஒரு இலட்சம் ரூபா தண்டம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அரிசித் தொகை கைவசம் உள்ளதாகவும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இம்முறை விவசாயிகளுக்காக நாட்டரிசி கிலோ 50 ரூபாவாகவும் சம்பா அரிசி 52 ரூபாவாகவும் உலர்த்தப்படாத நெல் 44 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அதனடிப்படையில், நாளை (01) முதல் அனைத்து நெல் சந்தைப்படுத்தல் சபைகளிலும் விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அரிசிக்கான சகாய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வர்த்தமானி ஊடாக 98 ரூபாவிற்கு சம்பா மற்றும் கெக்குளு அரிசியை விற்பனை செய்யுமாறும் நாட்டரிசியை 96 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் இருந்து இதுவரை 2500 ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அது தொடர்பான சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சட்டமாக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு மூவர், நால்வர் இருந்து கொண்டு அரிசி விலையை நிர்வகித்துக்கொண்டு கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளையிடுகின்றனர் . அரசாங்கம் என்ற வகையில், அதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் உறுதியான தீர்மானத்தில் உள்ளோம். அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறிவிடப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்
என அவர் மேலும் கூறினார்.