by Staff Writer 28-06-2021 | 2:37 PM
Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (28) தொடர்கின்றது.
மஹர சிறைச்சாலையின் 70 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையின் 150 கைதிகளும் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
தங்களுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, சிறைச்சாலை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற வகையில் செயற்படும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.