மக்கள் சக்தி மெய்நிகர் பள்ளி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது 

by Staff Writer 28-06-2021 | 4:59 PM
Colombo (News 1st) மக்கள் சக்தியின் மெய்நிகர் பள்ளி செயற்றிட்டம் இன்று (28) காலை 06 மணிக்கு சக்தி TV இல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மாணவர்களுக்கான இலவசக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கொரோனா நிலைமை காரணமாக பாடசாலை கல்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இணையக்கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தள வசதியில்லாத பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் தங்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வாக மக்கள் சக்தியினால் முதற்கட்டமாக இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு ​தோற்றவுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய, மெய்நிகர் பள்ளி செயற்றிட்டம் வார நாட்களில் காலை 06 மணி முதல் சக்தி TV இலும் அதன் மறு ஔிபரப்பு மாலை 06 மணிக்கு TV 1 அலைவரிசையிலும் ஔிபரப்பப்படவுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல், செயன்முறை பயிற்சிகள் ஆகியன பிரபல்யமான ஆசிரியர்களை கொண்டு தொலைக்காட்சி அலைவரிசையினூடாக முன்னெடுக்கப்படுகின்றது. கற்பித்தல் நடவடிக்கைகளின் போது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தௌிவுபடுத்துவதற்கான கையேடுகள், மக்கள் சக்தி ​மெய்நிகர் பள்ளியினூடாக விநியோகிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.