கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டம்

மரண தண்டனைக் கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டம்

by Staff Writer 27-06-2021 | 2:13 PM
Colombo (News 1st) வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளின் மரண தண்டனைக் கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையின் மரண தண்டனைக் கைதிகள் மீண்டும் கூரை மீதேறி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். வெலிக்கடை சிறைக்கைதிகள் நேற்று (26) சிறிது நேரம் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டிருந்த போதிலும், நேற்றிரவு முதல் மீண்டும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக தும்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளின் கைதிகளும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைக் கைதிகளை பாதுகாக்கும் குழுவின் பிரதம செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்தார். இதேவேளை, கூரைகள் மீதேறி ஆர்ப்பாட்டம் செய்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.