டெல்டா கொவிட் பிறழ்வு வேகமாக பரவும் அபாயம் 

டெல்டா கொவிட் பிறழ்வு வேகமாக பரவும் அபாயம் 

by Staff Writer 27-06-2021 | 2:29 PM
Colombo (News 1st) டெல்டா கொவிட் பிறழ்வு, நாட்டில் வேகமாக பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். புதிய பிறழ்வுகள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதென்பதால், அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது ஏனைய பிறழ்வுகளைக் காட்டிலும் துரிதமாக பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் இல்லாவிடினும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் அபாயகரமான சூழல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். இதேவேளை, நாட்டில் டெல்டா கொவிட் பிறழ்வுடன் ஐவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்காலத்தில் நாட்டின் பிரதான அரச வைத்தியசாலைகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.