இலங்கை கடல் எல்லையைக் கடந்தது MSC Messina

இலங்கை கடல் எல்லையைக் கடந்தது MSC Messina

by Staff Writer 27-06-2021 | 2:37 PM
Colombo (News 1st) தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது. இன்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கப்பல் சிங்கப்பூர் நோக்கி டக் படகின் மூலம் இழுத்துச் செல்லப்படுவதாக கடற்படை தெரிவித்தது. கப்பலில் பரவிய தீ, கப்பல் ஊழியர்களால் நேற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தென் கடற்பரப்பின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, MSC Messina கொள்கலன் கப்பலில் தீ பரவியது. 1995 ஆம் ஆண்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு, லைபீரிய கொடியுடன் பயணிக்கும் MSC Messina கப்பல், தென்னாபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. பின்னர் குறித்த கப்பல் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. கப்பலில் 28 பணியாளர்கள் உள்ளதுடன், அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.