இருவரை கடத்தி சித்திரவதை செய்த நபர் தேடப்படுகிறார்

இருவரைக் கடத்தி கைகளில் ஆணி அடித்து சித்திரவதை செய்த நபரைத் தேடி பொலிஸார் விசாரணை 

by Bella Dalima 27-06-2021 | 8:49 PM
Colombo (News 1st) கண்டி - பலகொல்ல பிரதேசத்தில் இருவரைக் கடத்தி, கைகளில் ஆணி அடித்து மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைக்குள்ளாக்கிய நபர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்தன்ன - தலுகொல்ல பகுதியிலுள்ள மலை உச்சிக்கு இருவர் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் மீட்கப்பட்ட இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.30-க்கு பலகொல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் கடத்தப்பட்டமை  விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட இருவரும் அம்பிட்டிய பிரதேசத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பலகொல்ல பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது. சித்திரவதைக்குள்ளான இருவரும் தேவாலயங்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டமையால் ஆத்திரமடைந்த குறித்த நபர், அவர்களை தமது வீட்டிற்கு அழைத்து, பின்னர் அம்பிட்டியவில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, சிலுவையில் அறைவதைப் போன்று ஆணிகள் அடித்து சித்திரவதை செய்தமை தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹனதெரிவித்தார்.