கைதிகளின் ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

by Staff Writer 26-06-2021 | 12:36 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களே எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கைதிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதனை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கைதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்ட 260 பேரின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான யோசனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே நேற்று (25) தெரிவித்திருந்தார். குறித்த கைதிகளின் பெயர்ப்பட்டியல் நீதி அமைச்சரினால் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.