தற்காப்பு கலை நிலையத்தில் தீ; 18 பேர் உயிரிழப்பு

சீனாவில் தற்காப்பு கலை நிலையத்தில் தீ விபத்து; 18 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்

by Bella Dalima 26-06-2021 | 12:58 PM
Colombo (News 1st) சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் உள்ள தற்காப்பு கலை நிலையத்தில் (Zhenxing Martial Arts Centre) ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) அதிகாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, தற்காப்பு கலை நிலைய கட்டடத்தில் 7 முதல் 14 வயது வரையான 34 பேர் தங்கி இருந்துள்ளதுடன், கட்டடத்தின் முதல் தளத்தில் அவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தீ பரவுவதை அறிந்து அவர்கள் கூச்சலிட்டுள்ளதுடன், அருகில் வசித்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்கு முன்னதாகவே பரவியிருந்த தீயினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மீட்கப்பட்டு, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தற்காப்பு கலை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.