பூவரசன் தீவில் அனுமதியின்றி கடலட்டை பண்ணை ஆரம்பம்

இலங்கை - சீன கூட்டு முயற்சியில் கிளிநொச்சி - பூவரசன் தீவில் அனுமதியின்றி கடல் அட்டை பண்ணை ஆரம்பம் 

by Staff Writer 26-06-2021 | 9:05 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை - சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை - பூவரசன் தீவு இலங்கையில் அருங்கொடைகளைக் கொண்ட ஓர் தீவாகும். இங்கு கடல் அட்டை பண்ணையை மேற்கொள்ள இங்குள்ள மக்கள் பல தடவைகள் கோரியும் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்போது சீனர்கள் அட்டைக் குஞ்சுகளை இங்கு விட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.   இது தொடர்பில் நாம் தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவியபோது இலங்கை - சீன கூட்டு நிறுவனம் ஒன்று எவ்வித அனுமதியும் இன்றி இங்கு அட்டைக் குஞ்சுகளை விட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தது. இவ்வாறான பகுதியில் இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என அதிகார சபை தெரிவித்தது. எனினும் கடந்த ஒரு வார காலத்திற்குள் இலங்கை - சீன கூட்டு நிறுவனம் ஒன்றினால் சட்டவிரோதமாக அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று அவ்விடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்தது. தாம் ஒத்திகையை மேற்கொண்டதாக இதன்போது சீனர்கள் கூறினாலும், அதனையும் அனுமதியின்றி செய்ய முடியாது என தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. அனுமதியின்றி சீனர்களுக்கு கடல் அட்டை வளர்ப்பிற்கு அனுமதி வழங்கியது யார்?