by Bella Dalima 26-06-2021 | 9:58 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்டை (George Floyd) கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை மற்றும் அதிகாரம் கொண்ட கடமையை துஷ்பிரயோகம் செய்தமை, ப்ளொய்டுக்கு இழைத்த கொடுமை ஆகிய காரணங்களால் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 45 வயதான Derek Chauvin-க்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை ப்ளொய்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
இது பொருத்தமான தண்டனையாக தெரிவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பிலான அனைத்து விடயங்களும் தனக்கு தெரியாது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு ஜோர்ஜ் ப்ளொய்டின் சகோதரர் மன்றில் வலியுறுத்தியிருந்தார்.
48 வயதான ஜோர்ஜ் ப்ளொய்ட் கடந்த வருடம் மே மாதம் Derek Chauvin எனும் பொலிஸ் உத்தியோகத்தரினால் வீதியில் வைத்து கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
பொலிஸ் அதிகாரியின் முழங்கால் சுமார் 9 நிமிடங்கள் ப்ளொய்டின் கழுத்தினை அழுத்தியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்தது.
இதன்போது, ப்ளொயிட் கூறிய I Cant Breath என்ற வார்த்தைகள் உலகளாவிய ரீதியில் பாரிய போராட்டத்திற்கு வித்திட்டது.