by Staff Writer 25-06-2021 | 5:35 PM
Colombo (News 1st) மரண தண்டனை கைதிகள் 260 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துவதற்கான பரிந்துரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரினூடாக சிறைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் தற்போது 500-க்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலரால், சிறைச்சாலை கட்டட கூரை மீதேறி முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆயுள் தண்டனையாக தண்டனையை இலகுபடுத்துமாறு கோரி கைதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை நேற்று (24) ஆரம்பித்தனர்.
இதே கோரிக்கையை முன்வைத்து நேற்று பிற்பகல் மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புபட்ட 08 கைதிகளும், எந்தவொரு தொடர்பும் அற்ற நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆகவே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த மேலும் தெரிவித்தார்.