தூத்துக்குடியில் இலங்கை அகதிகளை சந்தித்த கனிமொழி

தூத்துக்குடியில் இலங்கை அகதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனிமொழி

by Bella Dalima 25-06-2021 | 3:59 PM
Colombo (News 1st) தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு விஜயம் செய்த ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் க.கனிமொழி, அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் - மாப்பிள்ளையூரணி பகுதியிலுள்ள இலங்கை அகதி முகாமில் சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. குறித்த பகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி செயலாளரும் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவருமான க.கனிமொழி நேற்று முன்தினம் (23) விஜயம் செய்தார். இதன்போது, அங்குள்ள இலங்கைத் தமிழர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டு, அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளார். தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், கனிமொழியின் இந்த விஜயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.