சிலரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற குழு அனுமதி

தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற குழு அனுமதி

by Staff Writer 25-06-2021 | 4:50 PM
Colombo (News 1st) வெளிநாட்டு தூதுவர்களாக அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள இருவர், அமைச்சுகளின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவர் மற்றும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவருக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழு அனுமதியளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் (23) கூடிய உயர் பதவிகள் தொடர்பான குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய, பிரேஸிலுக்கான புதிய இலங்கை தூதுவராக சுமித் தசநாயக்க, ஈரானுக்கான புதிய இலங்கை தூதுவராக விஸ்வநாத் அபோன்சோ ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எஸ்.விதானபத்திரன, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிப் பாவனை ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக M.N.ரணசிங்க, வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு. S.M.C.LK.D. அல்விஸ் ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பெல்பிட்டவை நியமிப்பதற்கும் குழு அனுமதி வழங்கியுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.