வாவியை தூர் வாரும் பணிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை

திஸ்ஸமஹாராம வாவியை தூர் வாரும் பணிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை - தொல்பொருள் திணைக்களம்  

by Bella Dalima 25-06-2021 | 11:11 AM
Colombo (News 1st) கி.மு 3 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹம்பந்தோட்டை - திஸ்ஸமஹாராம வாவியை தூர் வாரும் பணிகளுக்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்தது. இது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க குறிப்பிட்டார். நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி அவசியமாகும். எனினும், கடந்த சில காலமாக நீர்ப்பாசன அபிவிருத்தி பணிகளுக்கு திணைக்களத்திடம் அனுமதி கோரப்படவில்லை என அனுர மனதுங்க கூறினார். தொல்பொருள் நடவடிக்கைகள் மற்றும் பழைய குளங்கள் தூர் வாரப்படுமாயின், அதற்கான அனுமதி பெறப்படுவது அவசியம் என நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அறியத்தருவதாகவும் அவர் கூறினார். திஸ்ஸமஹாராம குளம் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் ருகுண இராச்சியத்தை ஆண்ட மன்னர் திஸ்ஸவினால் அல்லது அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட தேவநம்பிய தீசனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமய வாவியை தூர் வாரும் பணி கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. துறைசார் அமைச்சரின் தலைமையில் இந்த திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சீன இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவியின் சேற்று மண்ணை அகற்றும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடையுடன் சீன பிரஜைகள் கலந்து கொண்டிருந்தனர்.