ஜான் மெக்கஃபி சிறையில் உயிரிழப்பு

மெக்கஃபி ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்கஃபி சிறையில் உயிரிழப்பு

by Bella Dalima 24-06-2021 | 2:53 PM
Colombo (News 1st) மெக்கஃபி ஆன்டிவைரஸ் (McAfee antivirus) மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்கஃபி (John McAfee) பார்சிலோனா சிறையில் உயிரிழந்துள்ளார். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஜான் மெக்கஃபியை அமெரிக்காவிற்கு அனுப்ப ஸ்பெயின் நீதிமன்றம் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார். கேட்டலோனியாவின் நீதித்துறை, மெக்கஃபி தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டது போல தெரிகிறது என தெரிவித்துள்ளது. முதல் வர்த்தக ஆன்டி வைரஸ் மென்பொருளை உருவாக்கிய மெக்கஃபியின் நிறுவனம் பல கோடி வர்த்தகத்தை பெற்றுத் தந்தது. அதன்பின் மெக்கஃபி ஆன்டிவைரஸ் நிறுவனம் Intel நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. பல இலட்சம் கோடி ரூபா வருவாய் ஈட்டியும் மெக்கஃபி நான்கு வருடமாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார். வேறு ஒருவரின் பெயரில் வங்கி கணக்குகளை உருவாக்கி அதில் வருவாயை செலுத்திக் கொண்டு வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது. புதன் கிழமையன்று ஸ்பெயினின் தேசிய நீதிமன்றம் அமெரிக்காவிற்கு அவரை அனுப்பி வைக்க அனுமதி வழங்கியது. ஜான் மெக்கஃபி தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார்.