பாராளுமன்ற உறுப்பினரானார் ரணில்

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் 

by Staff Writer 23-06-2021 | 12:51 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (23) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு வருடத்திற்கும் அதிகமான இடைவௌிக்கு பின்னர் இன்று நிரப்பப்பட்டது. இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி வரிசையிலுள்ள 13 ஆவது ஆசனத்தில் அமர்ந்தார். ஐந்து தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, 1977 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். நான்கு தசாப்தங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விக்ரமசிங்க, இலங்கை வரலாற்றில் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல்வாதியாவார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 249,435 வாக்குகளை மாத்திரம் பெற்று 2.15 வீதத்துடன் பிரதிநிதித்துவத்தை இழந்த ஐக்கிய தேசிய கட்சி, தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொண்டது.