ஜூலையில் இலங்கை வருகிறது Pfizer தடுப்பூசி

ஜூலையில் இலங்கை வருகிறது Pfizer தடுப்பூசி; AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக பயன்படுத்தப்படும்

by Bella Dalima 23-06-2021 | 4:15 PM
Colombo (News 1st) அமெரிக்க பன்னாட்டு மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான Pfizer அதன் COVID-19 தடுப்பூசிகளில் 78,000 டோஸை ஜூலை மாதம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் அவை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது டோஸாக Pfizer தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். இதேவேளை, உலக சுகாதார நிறுவனத்தின் COVAX திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்தில் 264,000 AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்தார். ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு அவை வழங்கப்படவுள்ளதுடன், Pfizer தடுப்பூசியும் இரண்டாவது டோஸாக வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் உலக தடுப்பூசி நன்கொடை திட்டத்தின் கீழ் கிடைக்கவுள்ள Moderna தடுப்பூசியினையும் இரண்டாவது டோஸாக வழங்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார். தற்போது கனடா, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல AstraZeneca தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாம் டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்கியுள்ளதாக சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.